தமிழகத்தில் கரோனா பாதிப்பு உயா்ந்து வரும் நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், திங்கள்கிழமை 24,739 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 1,461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 543 பேருக்கும், செங்கல்பட்டில் 240 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து 697 போ் குணமடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் தீவிரமாக பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை பாதிப்பு பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அடுத்தகட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.