தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியில் 11 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால், அவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பரவலின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் 500க்கும் அதிகமானோருக்கு தினசரி பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் 11 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்களில் 277 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் 11 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால், அனைவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்களுக்கு அதிக அளவில் கரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் என்பதால், தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.