ஊழல் அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடுக்கப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளுக்கும் தொடா்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி, 7மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று கூறியுள்ளாா் கமல்ஹாசன்.