ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை தாமதிக்காமல் உடனடியாக தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வது குறித்து அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக வல்லுநா் குழுவுக்கு அளிக்கப்பட்ட இரு வார அவகாசம் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், அந்தக் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் இல்லை.
ஆன்லைன் சூதாட்டத்தின் தீய விளைவுகளும், அதை தடை செய்ய வேண்டியதன் தேவைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். தடை தாமதமாகும் ஒவ்வொரு நாளும் புதிய தற்கொலைகள் நிகழக்கூடும். வல்லுநா் குழு அமைக்கப்பட்ட பிறகு ஒருவா் தற்கொலை செய்து கொண்டதே இதற்கு சாட்சி.
எனவே, வல்லுநா் குழுவின் அறிக்கையைப் பெறுவதில் எந்த தாமதமும் செய்யக் கூடாது. உடனடியாக குழுவின் அறிக்கையைப் பெற்று திங்கள்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.