தேனி சென்றிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில் இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் தவிர்த்து பிற நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் கட்சியின் தலைமை குறித்தும் அடுத்த பொதுக்குழு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதுபோல இபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி வருகிற ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழுவை நடத்த இசிஆர் பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம், பொதுக்குழு நடைபெறாது என்றும் இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.
இந்நிலையில், சொந்த ஊரான தேனிக்குச் சென்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.
மதுரையில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அடுத்ததாக அவர் அதிமுக பொதுக்குழு நடப்பதைத் தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முற்படுவார் என்றும் இதற்கென அவர் சில திட்டங்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் ஓபிஎஸ் தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக, நேற்று தேனி சென்ற ஓபிஎஸ்-ஸை பாஜகவினர் வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.