முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவின் மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கப்பட்டது.
திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இந்த பொற்கிழியை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவின் மூத்த முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக, கலைஞராகப் பார்ப்பதாகவும், கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என்றும் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக இனி 10 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்றார்.
பின்னர் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றவர், மாநகராட்சியில் பணிபுரிந்து உயிரிழந்த 6 தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 54 லட்சம் ரூபாய் பணிக்கொடையை வழங்கினார்.
மேலும், சாலைகளில் சேரும் மண்ணால் விபத்து ஏற்படுவதை தடுத்திட 66 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாலையைத் தூய்மை செய்திடும் வாகனத்தை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், தஞ்சை, திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர்கள், தஞ்சை மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.