பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தில் குதிரை வண்டி பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக குதிரை வண்டி பந்தயம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு குதிரை வண்டி பந்தயம் நடத்துவதாக கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு 32-வது ஆண்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த குதிரை வண்டி பந்தயத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குதிரை வண்டிகள் பங்கேற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியைக் காண வந்த மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று, பாய்ந்து செல்லும் குதிரை வண்டிகளை பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து ரசித்தனர்.