தமிழ்நாடு

பொறியியல், மருத்துவம் மட்டுமல்ல; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்: முதல்வர் ஸ்டாலின்

DIN

பொறியியல், மருத்துவம் என்பது மிகச் சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். இன்று வாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆற்றிய உரையில், 

இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடவில்லை; உங்களையெல்லாம் என்னுடைய சொந்தப் பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன்.

அரசு அதிகாரிகள்கூட இதனை ‘வழிகாட்டும் நிகழ்ச்சி’ என்று சொன்னார்கள். நம்மை விட, இந்தக் காலத்துப் பிள்ளைகள் மிக மிக விவரமானவர்கள்! (நான் சொல்வது உண்மைதானே…!, அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே) எனவே உங்களுக்கு எல்லாமே தெரியும். ஏனென்றால், எல்லோர் கையிலும் இப்போது மொபைல் போன் வந்துவிட்டது. இல்லை… இல்லை… உலகமே உங்கள் விரல்நுனிக்கு இப்போது வந்துவிட்டது.

மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையத்தைப் பார்த்து அறிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது. இருந்தாலும், உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன இதையெல்லாம் எடுத்துக் கூறி நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான், இந்த நிகழ்ச்சி. 

தமிழ்நாட்டு மக்களுக்கு நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, பரந்த எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான், ‘நான் முதல்வன்’ என்கிற இந்தத் திட்டம்! அதன் ஓர் அங்கமாகத்தான் இந்த ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம் - கல்லூரியில் சேர்ந்தோம் - பட்டம் வாங்கினோம் - வேலையில் சேர்ந்தோம் - கைநிறைய சம்பளம் வாங்கினோம் - என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை.

எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம்.
இதுதான், நான் முதல்வன் திட்டத்தின் உண்மையான நோக்கம்! பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன் - மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் - மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் - என்று பெயர் எடுப்பது மட்டுமல்ல கல்வித் திறனில் முதல்வன் - அறிவாற்றலில் முதல்வன் - படைப்புத் திறனில் முதல்வன் -  பன்முக ஆற்றலில் முதல்வன் - ஒருவரை மதிக்கத் தெரிந்தவன் - சமத்துவமாக நடக்கத் தெரிந்தவன் – அனைவரும் பின்பற்றும் பண்பாட்டு அடையாளம் கொண்டவன் - அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் பெற்றவன் – என்று தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவர்களை உயர்த்தும் திட்டம்தான் இந்த நான் முதல்வன் என்கிற திட்டம்! அந்த இலக்கை அடையவே இந்தக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நாம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

பொறியியல், மருத்துவம் என்பது மிகச் சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். இன்று வாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் படித்து முன்னேறி, உழைப்பைக் கொடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன. ஆகவே, கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்தந்தத் துறையில் மிகச்சிறந்த வல்லுநர்கள் ஆவதற்கு, கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடப்பிரிவுகள் குறித்தான ஒரு வழிகாட்டி நிகழ்ச்சிதான் இது. பல திறன்கள், தனித்திறன்கள் கொண்டிருக்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதே நம் நோக்கம். 

கல்லூரிக் கனவு நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேனிலைப்பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கக்கூடிய மாணவ, மாணவியர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நேரு விளையாட்டு அரங்கமே உங்களால் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. உங்களால் இந்த அரங்கமே அதிர்ந்து கொண்டு இருக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு துறையிலும், வெற்றி பெற்றவர்களை உற்றுப் பாருங்கள். அவர்கள் அனைவருமே, தங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்திருப்பவர்களாக, அந்தந்தத் துறையில், அளவுக்கதிகமாக கடுமையாக உழைத்திருப்பார்கள். பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதும், கடும் உழைப்புமே ஒவ்வொருவருடைய வெற்றிக்கு மிகமிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது. ஆகவே நீங்களும், உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுங்கள்! அதில் அதிகமான உழைப்பைக் கொடுங்கள்! உங்களுடைய வெற்றி நிச்சயம்!

இங்கே, உங்களுக்கான அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்து இங்கே விளக்கிப் பேச இருக்கிறார்கள். இங்கே வல்லுநர்கள் ஒவ்வொருவராக வந்து உங்களுக்கு விளக்கக்கூடிய வகையில் தகவல்களை சொல்லப் போகிறார்கள். நான் மாணவக் கண்மணிகளை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன், அவர்கள் சொல்லக்கூடிய விளக்கங்களை, விவரங்களை, குறிப்புகளை நீங்கள் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இங்குப் பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, நான் கூட அதை பார்த்துவிட்டுத்தான் இந்த மேடைக்கு வந்தேன். அவற்றையும் நீங்கள் தெளிவாக, பொறுமையாக அதைப் பார்த்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ‘நான் முதல்வன் - கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியானது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நடக்கப் போகிறது.

தமிழகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளாக 100 கல்லூரிகளைத் தேர்வு செய்தால், அதில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்று நான் இங்கு பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே கல்லூரிப் பட்டம் என்பதை எளிதாக அனைவரும் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், அந்தப் பட்டத்தைத் தாண்டிய தனித்திறமை இருந்தால்தான் நீங்கள் தனித்து ஜொலிக்க முடியும், பிரகாசிக்க முடியும். அதற்கு தன்னம்பிக்கை வேண்டும். 

நம்மால் முடியும் என்ற தைரியம் வேண்டும். நல்ல மொழியாற்றல் வேண்டும். தமிழ் மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய தாய்மொழியான தமிழிலும் உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்திலும் எழுத, பேச, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அது பகுத்தறிவாக இருக்கவேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம், அதை மறந்துவிடக் கூடாது. விரக்தி மனோபாவம் என்பது ஒருபோதும் இருக்கக்கூடாது. உங்களோடு மற்றவர்களை ஒப்பீடு செய்யாதீர்கள். இந்தப் பண்புநலன்கள் எல்லாம் ஒருவருக்கு நல்ல கல்வியால்தான் அமைந்திட முடியும். அத்தகைய கல்வியை, உயர்கல்வியைப் பெற வழிகாட்டியாக இருக்கப்போவதுதான், இந்தக் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி’!

அறிவை விரிவு செய்!
அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்!
உன்னைச் சங்கமம் ஆக்கு!
மானிட சமுத்திரம் நானெனக் கூவு
- என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.
உங்களுக்கு நான் சொல்வது இதுதான். இன்று முதல் புதிய மனிதர்களாக நீங்கள் ஆகிறீர்கள். வருங்காலச் சமுதாயம் உங்களுக்கு ஒளிமயமானதாக மாறப் போகிறது. உங்களது வாழ்வில் தென்றல் வீசப் போகிறது. உங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றுவதற்கான ஒரு வாய்ப்பை நான் பெற்றமைக்காக உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்,

2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் நீங்களும் இடம்பெற்றுள்ளீர்கள். அதேபோல, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும்.

ஒரு மனிதனின் மாபெரும் சொத்து என்பது அவனது கல்விதான். அதனால்தான் அதனை யாராலும் திருட முடியாத சொத்து என்று நான் திரும்ப திரும்பச் சொல்லி வருகிறேன்! வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம், கல்வியின் அவசியத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கல்வி உரிமை நாம் போராடிப் பெற்றிருக்கிறோம், தயவு செய்து அதை யாரும் மறந்துவிடக் கூடாது.

உங்களையெல்லாம் ‘அவையத்து முந்தியிருக்கச் செய்யும்’ தந்தை எனும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். படியுங்கள்… படியுங்கள்… படியுங்கள்… பகுத்தறிவோடு சிந்தியுங்கள்… உங்கள் சிறகுகளை விரித்து, உலகம் என்னும் பரந்த வெளியில் சிறகடித்துத் திரியுங்கள்… உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கு நீங்கள் வழிகாட்டிகளாய் திகழுங்கள்… இன்றைக்கு அறிவு என்பதுதான் ஒரு மனிதனின் ஆற்றலாக அளவிடப்படுகிறது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT