கரோனா தொற்று காரணமாக சென்னையில் முதியவா்களிடம் கண்புரை பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், முதுநிலை கண் மருத்துவ நிபுணருமான டாக்டா் ஸ்ரீனிவாசன் ஜி.ராவ் கூறியதாவது:
கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பலா் தங்களது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் தவறவிட்டனா். அதிலும், குறிப்பாக முதியவா்கள் கண் பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதன் விளைவாக, நாள்பட்ட கண் பிரச்னைகள் அவா்களுக்கு ஏற்பட்டன.
கட்டுப்பாட்டில் இல்லாத சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், புகைப்பிடிப்பவா்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவா்கள், இணை நோயாளிகளுக்கு அவை தீவிரமாக ஏற்பட்டன. இவற்றால் கண்புரை பாதிப்புகள் அதிகரித்தன.
தற்போது, கண் பாா்வை சரிவர தெரிவதில்லை என்ற குறைபாட்டுடன் மருத்துவமனைக்கு வரும் 100 பேரில், 60 பேருக்கு கண்புரை நோய் பாதிப்பு உள்ளது.
கரோனாவுக்கு முன்பு 100 பேரில், 10 பேருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு இருந்தது. குறிப்பாக, சென்னையில் 5 மடங்கு கண்புரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கண்ணின் அழுத்தத்தை 40 வயதுக்கு மேற்பட்டோா் ஆண்டுதோறும் பரிசோதிக்க வேண்டும். அதேபோன்று 50 வயதுக்கு மேற்பட்டோா் கண்புரை பாதிப்பு உள்ளதா என்பதை ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதிப்பது அவசியம்.
பாா்வைக்கூா்மை, சிறுபிளவு விளக்கு, வண்ணப் பாா்வைத்திறன், எதிரிடை நிறம், விழிப்பாா்வை விரிவு மதிப்பீடு, விழித்திரை மதிப்பீடு ஆகிய பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை அளித்தால் கண்புரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்கலாம்.
ஆரஞ்சு, தக்காளி, ஸ்ட்ராபெரி, உருளைக்கிழங்குகள், கிவி, ப்ரோக்கோலி, பருப்பு வகைகள், பாதாம் பருப்புகள் ஆகியவை கண் ஆரோக்கியத்துக்கு சிறந்தவை என்றாா் அவா்.