நீலகிரி: கொடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
5 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரா் சிபி, மற்றொரு சகோதரரான சுனில், ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியின் உதவியாளா் நாராயணசாமி, குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான பிஜின் குட்டியின் சகோதரா் மோசஸ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.
இன்று, தீபு ஆஜராகாத நிலையில் சயான், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி, சதீசன், உதயகுமார், சந்தோஷ் சாமி, ஜித்தின் ஜாய் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
கொடநாடு கொள்ளை வழக்கில் இதுவரை 257 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக நீலகிரி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக வெளி மாநிலத்திற்கு சென்று தனிப்படை விசாரிக்க வேண்டுயுள்ளதால் கால அவகாசம் தேவை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணை ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.