அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையேற்க ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது தலைமை பிரச்னை தலைதூக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அதிலும், குறிப்பாக அதிமுக ஆட்சி பொறுப்பை இழந்த பிறகு கட்சிக்கு ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் சுவரொட்டிகள் வழியாக பூதாகரமாகி வருகிறது.
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சிலரும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக சிலரும் மாறி மாறி சுவரொட்டிகள் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, செவ்வாய்கிழமை அதிமுக தமைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோளாக இருந்தது.
இந்நிலையில், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆக. 1-க்கு முன் மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு!
இதுதொடர்பாக சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஒரு ஆரோக்கியமான முறையில் அமைந்ததாகவும், அதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் எனவும், ஒற்றைத்தலைமை காலத்தின் அவசியம் எனவும், யார் அந்த ஒற்றைத்தலைமை என்பது குறித்து தற்போது விவாதிக்கபடவில்லை. இதுதொடர்பாககட்சி முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.