கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை செயலர், டிஜிபி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர்.
இதையும் படிக்க | பிளஸ் 2 மாணவி மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு; 20 காவலர்கள் படுகாயம்
போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க | மாணவி மரணம்: 'குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்'
இந்நிலையில், பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி வாகனம், தீ வைக்கப்பட்ட வாகனம், வகுப்பறைகள், உடைக்கப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.