கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறை நிகழ்ந்துள்ள நிலையில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர்.
போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனம், தீ வைக்கப்பட்ட வாகனம், வகுப்பறைகள், உடைக்கப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி வன்முறை: ‘ தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது ‘
ஆய்வுக்கு பின்னர் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
வன்முறையில் டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட 55 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.
பள்ளியின் சம்பவம் தொடர்பான வதந்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்.
இதையும் படிக்க |பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை அரசு தரப்பில் யாரும் சந்திக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
மாணவியின் மரணம் தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.
இந்நிலையில், பள்ளியில் நிகழ்ந்த வன்முறை நிலவரம் குறித்த அமைச்சர் எ.வ. வேலு நாளை திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.