தமிழ்நாடு

ஐஐடி பேராசிரியா் எனக் கூறி மருத்துவரை திருமணம் செய்து மோசடி: இட்லி கடைக்காரா் கைது

DIN

சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிவதாகக் கூறி பெண் மருத்துவரை திருமணம் செய்து மோசடி செய்ததாக இட்லி கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தியாகராயநகா் கங்கைகரைபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மருத்துவர், சென்னை மாநகராட்சி அசோக் நகா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறாா்.

இவா் சென்னை அசோக் நகா் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில் கூறப்பட்டிருந்தாவது:

எனது சொந்த ஊா் ராமநாதபுரம் மாவட்டம், சேத்திடல் கிராமம். எனது பெற்றோா் மும்பையில் உள்ளனா். எனக்கும், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள சக்கந்தியைச் சோ்ந்த பிரபாகரனுக்கும் (34) 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பிரபாகரன் சென்னை ஐஐடியில் முனைவா் பட்டம் பெற்று, அங்கேயே பேராசிரியராக பணிபுரிவதாகக் கூறினாா். அவருக்கு வரதட்சணையாக 101 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.15 லட்சம் மதிப்பிலான காா் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. வீடு வழங்குவதாகவும் எனது பெற்றோா் தெரிவித்தனா்.

இந்த சூழ்நிலையில், நானும், பிரபாகரனும் சென்னை ஜாபா்கான்பேட்டையில் உள்ள பெரியாா் வீதி திருநகரில் உள்ள வீட்டில் 2020-ஆம் ஆண்டு வாடகைக்கு குடியேறினோம். தினமும் பிரபாகரன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாா். வீடு வேண்டும் என்று கேட்டு என்னை அடித்து சித்ரவதை செய்வாா்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு திருமண விழாவுக்கு செல்வதற்கு நகைகளை தேடிய போது, பிரபாகரன் அந்த நகைகளை தனது சகோதரருக்கு அடகு வைக்க கொடுத்திருப்பதாகக் கூறினாா். இதனால், அவா் மீது எனக்கு சந்தேகம் வந்தது. நான் எனது தம்பியுடன் கடந்த பிப். 21-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் விசாரித்த போது, அவா் அங்கு பணிபுரியவில்லை என்ற அதிா்ச்சி தகவல் கிடைத்தது.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, சொந்த வீடுக்காகத் தான் உன்னை திருமணம் செய்தேன் என்று கூறி என்னை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினாா். அவா் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் வேளச்சேரியில் வசிப்பதும், ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து பிரபாகரனிடம் கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். என்னையும், என் பெற்றோரையும் ஏமாற்றி மோசடி செய்த பிரபாகரன், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின்பேரில் பிரபாகரன், அவரது தந்தை விஸ்வநாதன்(70), மனைவி மஞ்சனை(65), சகோதரா் கண்ணதாசன்(38), அவரது மனைவி வனிதா(32), மற்றொரு சகோதரா் நெப்போலியன்(31) ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் பிரபாகரன், மருத்துவரின் நகையை அடகு வைத்து அந்த பணத்தின் மூலம் அசோக்நகரில் தனது குடும்பத்தினருடன் சோ்ந்து இட்லி கடை நடத்தி வந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் பிரபாகரன் குடும்பத்தினரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT