நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்தவர் ஷபிக் இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டீக்கடையில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மூஸா (48) என்பவர் வடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது எரிவாயு உருளை காலியானதால் புதிய உருளையை அடுப்பில் மாட்டி மூஸா அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து மூஸா கடையை விட்டு வெளியே வந்தார். தீ வேகமாக பரவி கடையிலிருந்த எண்ணெய் சட்டியில் பிடித்துக் கொண்டது.
இது குறித்து தகவலறிந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த கடை ஊழியர்கள் மூஸா (48) , பள்ளிவிளையை சேர்ந்த பிரவீன் (25), காட்டுபுதூரைச் சேர்ந்த சுசீலா (50), திங்கள் நகரைச் சேர்ந்த பக்ருதீன் (35) சுப்பையா (66), சுதா (43), சசிதரன் (62), சேகர் (52) ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
காயமடைந்தவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.என்.ஹரிகிரண்பிரசாத் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினர்.