புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் கடன் தொல்லையால், ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் (38). அருகே உள்ள பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 4 ஆண்டுகளாக, தற்போதுள்ள அரியாங்குப்பம் வீட்டில் தனது மனைவி பச்சைவாழி (34) மற்றும் பிள்ளைகள் லட்சுமிதேவி (4), ஆகாஷ் (3) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இதையும் படிக்க.. திருச்செந்தூர் கோயில்: நாழிக்கிணற்றில் நீராட, வள்ளி குகை தரிசன கட்டணம் நாளை முதல் ரத்து
ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த நிலையில், கடன் அதிகமாகியதால் ஆட்டோ ஓட்டுவதைவிட்டுவிட்டு, எலட்ரிசியனாக வேலை செய்து வந்துள்ளார். கடன் தொல்லையால் குடும்பத்திலும் அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு வழக்கம் போல் இவர்கள் குடும்பத்துடன் வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர்.
வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து,ஒருவரும் வெளியே வராத நிலையில், அருகில் உள்ளவர்கள் அரியாங்குப்பம் காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். காவலர்கள் வந்து பார்த்தபோது, ஒரு அறையில் பச்சைவாழி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர். அதன் அருகே தியாகராஜன் தூக்கிட்டு இறந்த நிலையில் உடல்களை மீட்டுள்ளனர்.
காவல்துறை விசாரணையில், கடன் தொல்லையால் இறந்துள்ளதாகவும், வேறு ஏதாவது காரணம் உள்ளதா எனவும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.