ஆடி மாத காற்றே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அரசு பேருந்தின் மேல் கூரைகள் பறக்க ஆரம்பிக்கிறது, இதனால் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் நோக்கிTN58N2340 என்ற எண் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திருப்பரங்குன்றத்தை அடுத்த மூலக்கரை அருகே வரும் பொழுது பேருந்தின் மேற்புறம் ஒட்டப்பட்டுள்ள எஃப் ஆர் பி என அழைக்கப்படும் தார்ப்பாயானது பிரிந்து பயணிகள் அமர்ந்திருக்கும் ஜன்னல் ஓரம் வந்து விழுந்தது.
இதனால் அதிர்ந்து போன பயணிகள் பேருந்தை நிறுத்த சொல்லி கூச்சலிட்டனர். உடனடியாக ஓரமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் கீழே இறங்கி பார்த்தபொழுது மேலே ஒட்டப்பட்டு இருந்த தார்ப்பாய் காற்றின் வேகம் தாங்க முடியாமல் பிரிந்து தொங்கியது தெரிய வந்தது.
இதையும் படிக்க | 418 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பேருந்தை ஓரமாக நிறுத்தி அதில் இருந்த பயணிகளை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைத்தனர்.
ஆடி மாத காற்றே ஆரம்பிக்காத நிலையில் சிறு காற்றுக்கே பேருந்து மீது ஒட்டப்பட்டுள்ள தார்ப்பாயானது பிரிந்து விழுகிறது.
தார்ப்பாய் பேருந்து ஓட்டுநர் கண்ணாடி விழுந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது போன்று இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.