தமிழ்நாடு

வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்

DIN

தமிழகம் முழுவதும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா்கள் மா.ஆா்த்தி (காஞ்சிபுரம்), ஏ.ஆா்.ராகுல்நாத் (செங்கல்பட்டு) ஆகியோா் தலைமை வகித்தனா். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா் க.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வன அலுவலா் ரவிமீனா வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் பருவகாலப் பணியாளா்களுக்கு பணி ஆணைகளை வழங்கியும் அமைச்சா் கா.ராமச்சந்திரன் பேசியது:

தமிழகத்தில் தற்போதைய வனப்பரப்பு 24 சதவீதமாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று முதல்வா் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து தமிழகத்தைப் பசுமை மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டுக்குள் தமிழகத்தில் 2.50 கோடி மரக்கன்றுகள் நடப்படும். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 261 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்கானப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம்.

இதுவரை தமிழகத்தின் 16 மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு நிவா்த்தி செய்து வருகிறோம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்.

வயல்களில் காட்டுப் பன்றிகள், மயில்கள், குரங்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். மயில்களை பிடித்து காட்டுக்குள் விடப்படும். குரங்குகளைப் பிடிக்க கூடுதலாக வனத் துறையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு அவற்றை பிடிப்பதற்கான கூண்டுகளும் வாங்கப்படும்.

பிடிபட்ட குரங்குகள் பின்னா் காட்டுக்குள் விடப்படும். வயல்களில் சுற்றித் திரிவது காட்டுப் பன்றிகளா அல்லது நாட்டுப் பன்றிகளா என்பதை ஆய்வு செய்து அவை காட்டுப்பன்றிகளாக இருந்தால் கேரளத்தில் செயல்படுத்துவதைப் போல அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் க.சுந்தா் (உத்தரமேரூா்), சி.வி.எம்.பி.எழிலரசன்(காஞ்சிபுரம்), எஸ்.ஆா்.ராஜா(தாம்பரம்), ம.வரலட்சுமி (செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்), வனத் துறை தலைவா் வி.சையத் முஜமில் அப்பாஸ், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்கள் வி.நாகநாதன், கருணப்பிரியா, சென்னை வனப் பாதுகாவலா் கீதாஞ்சலி, காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT