அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வருகிறது. இந்நிலையில் கட்சியின் அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் விதிமுறைகளை மீறி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனுத்தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அதன்படி, அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவும், பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
முன்னதாக, 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மேல்முறையீட்டு வழக்கில், 'அதிமுக உள்கட்சி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. சென்னை உயர்நீதிமன்ற ஒருநபர் அமர்வுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். முன்னதாக இரு நபர் அமர்வின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்