சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அந்தக் கட்சியின் முன்னாள் உறுப்பினா் பி.ஏ.ஜோசப் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பும், தடை விதிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் உச்ச நீதிமன்றம், உயா்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா். இந்நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என அந்தக் கட்சியின் முன்னாள் உறுப்பினா் பி.ஏ.ஜோசப் என்பவா் உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்குத்
தொடா்ந்துள்ளாா். அதில், ‘அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் அந்தக் கட்சியின் சின்னத்தை முடக்கக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு ஜூன் 28-ஆம் தேதி மனு அனுப்பிருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை
உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.