கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கி வரும், கோடையான்தோட்டம் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாக வளங்கி வரும் பழமையும், பெருமையும் கொண்ட கோடையான் தோட்டம் ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில். தென் சிறுவாச்சூர் என போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் மூலவர், கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இத்தகைய சிறப்பு பெற்ற சக்தி தலத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றத்தை தொடர்ந்து, நேற்று அய்யப்ப சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், நவக்கிரக லட்சுமி ஹோமம் கோபூஜை வாஸ்துசாந்தி ஆகியவற்றுடன் யாக சாலை பிரவேசமும் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று 2 ஆவது கால யாகசாலை பூஜை திரவிய ஹோமம் மகா பூர்ணாஹூதியும் மகா தீபராதனையும் நடைபெற்று மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும், அதனைத் தொடர்ந்து சதுர்தசி திதி உத்திர நட்சத்திரம் மிதுன லக்னத்தில் விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பிறகு மூலவர் மதுரகாளியம்மனுக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.