கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை அணையில் 13.6 மி.மீ மழையும், தேக்கடி ஏரியில் 16.8 மி.மீ மழையும் பெய்தது. இதனால் அணைக்குள் வினாடிக்கு 1,414 கன அடி தண்ணீர் வந்தது.
புதன்கிழமை நிலவரப்படி, அணையில் 25.8 மி.மீ மழையும், தேக்கடி ஏரியில், 13.4 மி.மீ மழையும் பெய்தது, இதனால் அணைக்குள் வினாடிக்கு 1,904 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 490 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதையும் படிக்க | மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக சரிவு
அணை நிலவரம்: அணையின் நீர்மட்டம் 127.40 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 142), நீர் இருப்பு, 4,201 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 1,904 அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,655 கன அடியாகவும் இருந்தது.
முதல் போக சாகுபடி: அணையில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கூடலூர், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், உத்தமுத்து கால்வாய், சின்ன வாய்க்கால் ஆகிய பாசன பரப்புகளில் முதல் போக சாகுபடியில் நன்செய் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.