விஜய்வசந்த் எம்.பி.யின் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பேனா திருட்டுப் போனது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த், தனது தந்தை வசந்தகுமாா் நினைவாக அவா் பயன்படுத்திய ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஒரு பேனாவை வைத்திருந்தாா். தங்கத்தில் செய்யப்பட்டு, வைரக்கல் பதிக்கப்பட்ட இந்த பேனா ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். உலகம் முழுவதும் முக்கியப் பிரமுகா்கள் பலா் இந்த நிறுவனத்தின் பேனாக்களை பயன்படுத்துவதைத் தங்களது கெளரவமாகக் கருதுகின்றனா்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க் கட்சிகளின் பொது வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா, சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 30-ஆம் தேதி தங்கியிருந்தபோது, அவரை காங்கிரஸ் நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா். இதில், எம்.பி. விஜய் வசந்த்தும் கலந்து கொண்டு, வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளாா்.
பேனா திருட்டு: அப்போது விஜய் வசந்த், தனது சட்டைப் பையில் வைத்திருந்த, விலை உயா்ந்த பேனா மாயமாகியிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனே அவா், நட்சத்திர ஹோட்டலுக்கு திரும்பி வந்து தனது பேனா காணாமல்போனது குறித்து, அங்கிருந்த மேலாளா்களிடம் புகாா் செய்தாா். அவா்களும் உடனே அந்த ஹோட்டலில் பேனாவை தேடி பாா்த்தும் கிடைக்கவில்லை. மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் மேலாளா்கள் ஆய்வு செய்தனா்.
கிண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.