சேலம் : சேலத்தில் அனுமதியின்றி வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கொண்டபநாயக்கன் பட்டி அசோக் நகர் பகுதியில் பிரபல தனியார் நிறுவனம் (திருவேணி ) குழும நிறுவனத்தின் அங்கமான கட்டுமான நிறுவனத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பாறைகளை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டுமான நிறுவனம் வெடிவைத்து தகர்த்து வருகின்றனர்.
இதனால் அருகாமையில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த கட்டுமான நிறுவனம் குடியிருப்புக்கு நடுவே எவ்வித பாதுகாப்பும் இன்றி இரவு பகல் பாராமல் வெடிவைத்து பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர்.
இதனால் வெடித்து சிதறிய துகள்கள் பொதுமக்கள் மீது விழுந்து சிலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து கட்டுமான நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்கையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக காவல்துறையினர் மற்றும் குண்டர்களை வைத்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் வெடி வைப்பதால் வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்து எங்கள் வீடுகளை பாதுகாத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.