ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இன்று அதிகாலை திரையரங்கில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திரையரங்கம் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே அதிகாலையில் தனியார் திரையரங்கு ஒன்றில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திரையரங்கு முழுவதுமாக தீக்கிரையானதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள சுமதி மினி திரையரங்கத்தில் தற்போது அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு காட்சியை முடித்துவிட்டு வழக்கம் போல் ஊழியர்கள் தியேட்டரை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து மள மளவென திரையரங்கின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளது.
தீ பற்றி எரிவதைக் கண்ட காவலாளி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த சோளிங்கர் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் திரையரங்கம் முழுவதுமாக தீக்கிரையானது.