அதிமுகவின் செயல்பாடு மற்றும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒற்றைத் தலைமை பிரச்னையில், உயர்நீதிமன்ற கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோல், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவும் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
“பொருளாளரான ஓ. பன்னீர்செல்வம் கட்சி நிதியை விடுவிக்காததால், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. கட்சி செலவுக்கான தொகையையும் எடுக்க முடியாத நிலையை ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ளார்.
தனக்கான செல்வாக்கு, நம்பிக்கையை இழந்துவிட்டதால்தான் பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தடை கோருகிறார். அதிமுக செயல்பாடுகளையும், பொதுக்குழு செயல்பாட்டையும் முடக்கப் பார்க்கிறார். இந்த செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.”