சிம்மக்கல் கருணாநிதி சிலைக்கு மனு கொடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நீக்கப்பட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய பணியாளர்களாகவும், தற்காலிக பணியாளர்களாகவும் பணியாற்றி வந்த 136 பேரை நிதி நெருக்கடியை காரணம் காட்டி கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழகம் வாய்மொழியாக தகவல் கூறி பணியில் இருந்து நீக்கியது.
மீண்டும் பணியில சேர்த்துக் கொள்ளக் கூறி 136 பணியாளர்கள் பல்கலைக்கழக வளாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக என பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு கோரிக்கை மனு கொடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடியல் தருவதாக கூறி முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். நாங்கள் 136 பேர் பணியில் சேர்க்க கோரி 80 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறோம் ஏன் எங்களை கண்டு கொள்ளவில்லை என்றும், பணியில் சேர்க்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இவர்களில் ராம் என்கிற மாற்றுத்திறனாளி கடந்த வாரம் குடும்ப வறுமையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.