மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020-21 இல் முறையாக கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கு விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தமால் மாணவர்கள் சேர்க்கை நடத்த அப்போதைய மருத்துவ தேர்வுக்குழுவின் செயலாளர் செல்வராஜ் தான் காரணம் என்றும், தன்னுடைய அதிகாரத்தை துஷ்ப்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட்டது.
இதையடுத்து முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீது வழக்குப் பதியுமாறும், மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்மந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்தி சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க | மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது
அப்போது, கல்லூரிகள் தான் அதிக கட்டணம் வசூலித்ததாகவும், ஆனால் தேர்வு குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மாணவருக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டை மனுதாரரிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், எந்த கல்லூரிக்கும் மனுதாரர் சாதகமாக செயல்பட வில்லை என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே. துறைரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஓய்வு ஊதிய பலன்களை நிறுத்தி வைக்க பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.