புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீ ராமுலு ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் முறையாக காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார். இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
காரைக்கால் மாவட்டத்தில் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | யுபிஐ பரிவா்த்தனை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது: என்பிசிஐ
புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் அனைத்து மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், மக்கள் பீதியடைய வேண்டாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதாவது, காலரா பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பீதியடைய வேண்டாம்.
மக்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பதுடன், கொதிக்கவைத்த குடிநீரையே குடிக்க வேண்டும், சாப்பிடும் முன், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும். சரியாகக் கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும்.. அனைவரும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.