தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாகக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்
துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டி.ஆர்.பி. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை நியமிக்கலாம்.
திறமை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறியலாம்.
இடைநிலை ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள் - 2ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியானவர்கள் வருகிற ஜூலை 4 முதல் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு