யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலுடன் உரையைத் தொடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, தமிழ் மக்களுக்கு ஒரு சல்யூட் என்று கூறினார்.
சென்னையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பேசுகையில், தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கம் என பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசுகையில், தமிழ் மொழி ஒரு உன்னதமான மொழி. தமிழ் மக்களுக்கு சல்யூட். வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்திலிருந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியுள்ளார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திரௌபதி முர்மு, இமாலய வெற்றி பெற துணை நிற்போம். திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி என பேசி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று கூறினார்.