பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமானவரித் துறை முடக்கியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் சம்மந்தப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல கோடி வரி ஏய்ப்பு செய்திருந்ததும், கணக்கில் வராமல் பல கோடி அளவிக்கு சொத்து வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சுமார் ரூ.4,430 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ.4,500 கோடி அளவுக்கு தமிழகம் மற்றும் பல இடங்களில் சொத்துகளை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2017 ஆண் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர்.
சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ரூ. 20 மதிப்புள்ள ஒரு கப் டீக்கு ரூ. 50 ஜிஎஸ்டி... இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?
கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துகள், அடுத்து ரூ.300 கோடி சொத்துகள், ரூ.2,000 கோடி மதிப்பிலான சிறுதாவூர் பங்களா சொத்துகள் என இதுவரை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சுமார் ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.