கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே க.புதுப்பட்டியில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே க.புதுப்பட்டியில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.டி.கே.ஜக்கையன் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை தாங்கி பேசியதாவது:
அதிமுக பிரிந்த போது ஜெயலலிதா எப்படி கட்சியை மீட்டெடுத்தார். ஒற்றைத் தலைமை என 4 வருடம் முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
அதேபோல் தற்போது கட்சியை தலைமை வகித்து நடத்த உள்ளார். 63 எம்.எல்.ஏக்கள், 5 மாவட்ட செயலாளர்கள் தவிர அனைத்து மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் ஆதரவாக உள்ளனர் என்றார்.
இதையும் படிக்க: மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது தமிழ்நாடு அரசு
முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.இளையநம்பி வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் சோலை ராஜா நன்றி கூறினார். சின்னமனூர் ஒன்றிய அவை தலைவர் கண்ணன், புதுப்பட்டி பேரூராட்சி செயலாளர் சிவக்குமார், கோம்பை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, 10-க்கும் மேலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.