தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் யானைகளுக்கு நடைப்பயிற்சியுடன் கூடிய குளியல் தொட்டி

DIN

திருச்சி: ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்குச் சொந்தமான உடையவர் தோப்பில், யானைகள் குளிப்பதற்காக நடை பயிற்சியுடன் கூடிய குளியல் தொட்டி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், ஆண்டாள் மற்றும் லட்சுமி யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப் பபடுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டாள் மற்றும் பிரேமி (எ) லட்சுமி ஆகிய இரு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரு யானைகளும் தினசரி விஸ்வரூப பூஜை மற்றும் திருவிழா நாட்களில் பங்கேற்று கைங்கர்யப் பணிகள் செய்து வருகின்றன. யானைகளுக்கு இயற்கை உணவுகள் மற்றும் சமைத்த உணவுகள் மருத்துவர்களின் ஆலோசனைகள்படி வழங்கப்பட்டு வருகிறது. மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் நலம் பாதுகாக்கப்படுகிறது.

மேலும், வனத்துறை அலுவலர்களிடம் உரிய கால இடைவெளியில் ஆலோசனைகள் பெறப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் அருகே பஞ்சக்கரை சாலையில் இயற்கை சூழலில் அமைந்துள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமாக உடையவர் தோப்பு சுமார் 5.48 ஏக்கரில் அமைந்துள்ளது.

இந்த தோப்பில், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு எண்.104-ன்படியும் இத்திருக்கோயில் யானைகளுக்கு குளியல் தொட்டி சுமார் 40 அடி நீளம் 40 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்துடன் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஒரு சுற்றுக்கு 857 மீட்டரில் நடைபாதையும் கோயில் நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக மூன்று நாளைக்கு ஒரு முறை குளியல் தொட்டியில் நீராடி மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தினசரி திருக்கோயிலிலிருந்து சுமார் 1.100 கி.மீட்டர் தொலைவிலுள்ள இந்த தோப்பிற்கு இரண்டு யானைகளும் நடைபயிற்சியாக சென்று தோப்பிலுள்ள வட்டப்பாதையில் மட்டும் குறைந்தபட்சம் 5.00 கி.மீ அளவிற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி முடிந்த பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருக்கோயில் யானைக் கூடத்திற்கு நடைப்பயிற்சியாகவே வந்து சேரும்.

இதனால் யானைகளுக்கு நாளொன்றுக்கு வழக்கமான பணிகளுடன் சேர்ந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தற்போது, இந்த இரு யானைகளும் நடைப்பயிற்சி மேற்கொண்டு தொட்டியில் ஆனந்த குளியல் போடும் காட்சி பொதுமக்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT