புதுக்கோட்டை: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற மாநில அரசின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 4 மாவட்டங்களில் 100 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநிலப் பொதுச்செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அகில இந்தியத் துணைத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.