மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் உருவப் படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன் எனப் பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்தனர். அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் அருகே ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.