ஈரோடு: கரூர் மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரிகளை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தென்னிலை வழியாக கரூரிலிருந்து உரிய அனுமதியின்றி , தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு
இந்த நிலையில் இன்று தென்னிலை அருகே ராசாம்மாளையம் என்ற இடத்தில் கரூரிலிருந்து உரிய அனுமதியின்றி, அதிகளவு கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் அதிகளவு கிராவல் மண்ணை கிராமத்தின் வழியாக ஈரோட்டிற்கு கடத்தி செல்வதால் சாலைகள் பழுதடைந்து, விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது லாரிகளின் அனுமதி சீட்டுகளை சோதனை செய்த போது அந்த அனுமதி சீட்டு சேம்பர் மண் என்று சொல்லக்கூடிய செம்மண் எடுக்க அனுமதி வழங்கியதும் அந்த அனுமதி சீட்டின் மூலம் கிராவல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
மேலும் கிராவல் எடுக்க ஒரு முறை அனுமதி சீட்டு பெற்று விட்டு அதனை பல நாள்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருவதாகவும் அனுமதி சீட்டில் உள்ள லாரியின் வாகன எண்ணை ஒரு சில லாரி உரிமையாளர்கள் மாற்றிக் கொள்வதாகவும் இதன் காரணமாக அளவுக்கு அதிகமாக கிராவல் மண் கடத்தி ஏற்றி வருவதாகவும் மேலும் அனுமதி சீட்டு அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் பாகுபாடோடு தான் வழங்கப்பட்டு வருவதாகவும் சில கிராவல் மண் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் குற்றமும் சாட்டுகின்றனர்.
ஒரு சிலர் செய்யும் இது போன்ற தவறுகளால் முறையாக மண் எடுத்து விற்பனை செய்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இதனை கனிம வளத்துறை அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட லாரிகளை அங்கு வந்த காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.