தமிழ்நாடு

தமிழகத்தில் 314  கோயில்களுக்கு மத்திய அரசின் தரச் சான்றிதழ்: முதல்வர் பாராட்டு

DIN

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் தமிழகத்தில் உள்ள 314 கோயில்கள் தரச்சான்று பெற்றமைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

314 திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக 10 கோயில்களின் இணை ஆணையர்/செயல் அலுவலர்களுக்கு தரச்சான்று வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

முன்னதாக, தரச்சான்றுகளை வழங்கி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக,

மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு – அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை – அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சென்னை, தங்கசாலை - அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில் – அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் – அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், மகாபலிபுரம் – அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சென்னை – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சென்னை – அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர் / செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்தினார். 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் - அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 திருக்கோயில்களில் நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 
 
இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டு நிறுவனம், நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கிடும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியினை செய்து வருகிறது. இந்நிறுவனம் மத வழிபாட்டுத்தலங்களில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து கடவுளுக்கு சுத்தமான சுகாதாரமான பிரசாதம் படைத்தல் (BHOG-Blissful Hygienic Offering to God) சான்றிதழ்களை வழங்கி வருகிறது. 

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகள் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் தயாரிக்கப்படுவதை பரிசோதனைக்குட்படுத்தி இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றிதழ்கள் 6 திருக்கோயில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் சீரிய முயற்சியால் 308 திருக்கோயில்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், 440 திருக்கோயில்களுக்கு சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 394 மத வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் 314 திருக்கோயில்களுக்கு இச்சான்றிதழ் பெறப்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

இதன்மூலம்  திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில்குமார், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT