ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில், 5 நாள்கள் தடைக்குப் பின்பு புதன்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 5 நாள்கள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அரசு தடை விதித்தது.
இதன் காரணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த 5 நாள்களாக பக்தர்கள் தரிசனம் செய்யவும், கோயிலுக்குள் உள்ள தீர்த்தக் கிணறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசின் தடை உத்தரவு நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், கோயிலுக்குள் உள்ள கிணறுகளில் நீராடவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.