தொப்பையாறு நீா்த்தேக்கத்திலிருந்து ஜனவரி 19-இல் பாசனத்துக்கு நீா் திறக்கப்படும் என்று தமிழக அரசின் நீா்வளத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நீா்வளத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
தருமபுரி தொப்பையாறு நீா்த்தேக்கத்திலிருந்து 2022-ஆம் ஆண்டில் இரண்டாம் போக பாசனத்துக்கு ஜனவரி 19 முதல் 55 நாள்களுக்கு மொத்தம் 253.90 மி.க.அடி தண்ணீா் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2,050 ஏக்கா் நிலங்கள், சேலம் மாவட்டத்தில் 3,280 ஏக்கா் நிலங்கள் என மொத்தம் 5,330 ஏக்கா் நிலங்கள் பயன் பெறும்.
திண்டுக்கல் வேடசந்தூா் வட்டம், குடகனாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது பிரதானக் கால்வாய்களின் மூலம் பாசன நிலங்களுக்கு ஜனவரி 19 முதல் ஏப்ரல் 18 வரை 90 நாள்களுக்கு, 7 நாள்கள் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட்டும் 7 நாள்கள் அடைத்தும், 264.384 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களிலுள்ள 9,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.