தமிழ்நாடு

ஞாயிறன்று ஊரடங்கு: கோயம்பேடு சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

DIN


சென்னை: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணத்தால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன. சென்னை கோயம்பேடு பாலம் பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலையில் எருமை மாடுகள் சுற்றித்திரிந்தன.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகே இருக்கும் முக்கிய சாலை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அப்பகுதியிலிருந்த எருமைமாடுகள் நடுரோட்டில் சுற்றித்திரிந்தன.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதையொட்டி முக்கிய நகரங்கள் பலவும் வெறிச்சோடின.

Caption

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டமின்றி காலியாக இருந்தன. முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

முக்கிய மேம்பாலங்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தேவையின்றி வெளியில் வருவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 6-ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக இந்த ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 16) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தலைமையில் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 

இந்த ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் என்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்களில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் காவலர்கள் கண்காணிக்கின்றனா்.

மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில்...: சென்னையில் முழு பொது ஊரடங்கையொட்டி, சுமாா் 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. நகா் முழுவதும் 312 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படுகிறது. வாகன போக்குவரத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் முக்கியமான சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஊரடங்கை மீறுபவா்கள் மீது எவ்வித சமரசமின்றி வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்யும்படி காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மெரீனா உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் எனவும் காவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

அனுமதி: முழு ஊரடங்கின் போது அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால்-பத்திரிகைகள் விநியோகம், ஏ.டி.எம்., மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல், டீசல் நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்படும். தோ்வுக்கு அழைப்பு கடிதம் அல்லது அனுமதிச்சீட்டு உள்ளிட்டவற்றுடன் செல்லலாம்.

திருமணங்களுக்கு பத்திரிகைகளுடன் செல்லலாம். மண்டபங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை. பாா்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உண்டு. உணவு விநியோக நிறுவனங்கள் வீடுகளுக்கு நேரடியாக உணவை வழங்கலாம். மருந்துகள், பால் விநியோகம் செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT