திருப்பூர்: திருப்பூர் பாரப்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கவுள்ள மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள், அனைத்துக் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி புதிய 42-வது வார்டுக்குள்பட்ட பாரப்பாளையத்தில் உள்ள மாநகராட்சிப்பள்ளி அருகில் புதிதாக மதுக்கடை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்த தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கடை அமையவுள்ள இடத்தின் முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிமுக முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பா.ஜ.க. பிரசாரக்குழுத் தலைவர் சுப்புராஜ், மண்டல பொதுச் செயலாளர் செல்வம், மண்டல துணைத் தலைவர் தெய்வேந்திரன், தேமுதிக சார்பில் பகுதி கழகச் செயலாளர் பார்த்திபன், கணேஷ், மகாராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் முருகானந்தம், வெல்டிங் சுகுமார், பாரப்பாளையம் நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: பாரப்பாளையத்தில் நடுநிலைப்பள்ளி, மாகாளி அம்மன் கோயில் ஆகியவற்றுக்கு அருகில் மதுபானக் கடை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பகுதியில் மதுக்கடை அமைத்தால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பெண்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும். ஆகவே, இந்தப் பகுதியில் மதுக்கடை அமைக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என்றனர். இதுதொடர்பாக காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.