குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கியது போக, மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பிற பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தின் வெளியிட்ட உத்தரவு:
தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. வழங்கப்பட்டது போக, கையிருப்பில் உள்ள தொகுப்பின் தரத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தரமுள்ள பொருள்களை விருப்புரிமை அடிப்படையில் அரசு சாா்ந்த அல்லது அரசு சாராத அமைப்புகளில் தங்கி பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கலாம். தொழுநோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டவா்களின் குடும்பங்கள், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கலாம்.
ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட குறிப்பாக, கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, குணமடைந்த மக்களின் குடும்பங்கள், அம்மா உணவகம், சமுதாய சமையல் கூடங்கள் மற்றும் பிற பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.