சாலையில் பெரிய பள்ளத்தை மாநகராட்சி முறையாக சீரமைக்காததால் தீயணைப்பு துறையினர் சீரமைத்தனர்.
மதுரையில் பல்வேறு பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை பணி மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் மதுரை மாநகர் முழுவதும் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.
இதனால் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும், மதுரை மாநகராட்சி கண்டு கொள்ளவில்லை. மேலும் பாதாள சாக்கடை பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தின் எதிர்புறத்தில் பெரிய அளவு பள்ளம் இருந்தது. இந்த பள்ளத்தை மாநகராட்சி முறையாக சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திப்பதுடன் கீழே விழும் சூழலும் இருந்து வந்தது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெரியார் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தீயணைப்பு துறையினர், அந்த பள்ளத்தினை நிலைய அலுவலர் சேகர் உத்தரவின் பேரில் இன்று சீரமைத்தனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.