தமிழ்நாடு

புயலையே சந்திக்கும் ஆற்றல் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

DIN


புயலையே சந்திக்கும் ஆற்றல் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை (டிச.11) நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்து உரையாற்றினார்.

அப்போது, திராவிட மாடல் ஆட்சியை பற்றி இங்கே பலர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள், நம்முடைய மகேஸ் பொய்யாமொழி கூட பேசுகிறபோது மழையை நாம் எப்படி எல்லாம் எதிர்கொண்டோம் என்பதை பற்றி குறிப்பிட்டுச் சொன்னார்கள்.  மூன்று நாள்களாக பெய்த மழை - புயல் அதெல்லாம் எப்படி சமாளித்தோம், அதில் என்ன பெயர் கிடைத்திருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள்.

இரண்டு நாள்களாக பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத்தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம் ஆட்சிக்கு வந்தபோது என்ன நிலை, ஒரு பெரிய கொடிய தொற்று நோய் ‘கரோனா‘. அதிலிருந்து மீண்டோம். அதிலிருந்து மீண்டோம் என்றால் நான் பல நேரங்களில் சொன்னதுண்டு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மா.சுப்பிரமணியன் மட்டும் மருத்துவத் துறை அமைச்சர் அல்ல, முதல்வரிலிருந்து அனைவரும் மருத்துவத் துறை அமைச்சராக மாறினோம். அதனால்தான் அதைக் கட்டுப்படுத்த முடிந்தது.

அது முடிவதற்கு முன்னாலே, வெள்ளம் வந்தது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்து அதிலும் வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்றால், இதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றார், ‘உழைப்பு... உழைப்பு... உழைப்பு‘தான் நம்முடைய மூலதனமாக இருக்க வேண்டும். அதைத்தான் ஸ்டாலினடத்தில் நான் பார்க்கிறேன் என்று சொன்னாரே.

எனவே அந்த உழைப்பை பயன்படுத்திதான், நான் மட்டுமல்ல - அமைச்சர்கள் மட்டுமல்ல - சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல - உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்ல - நம்முடைய கழகத் தோழர்கள் – இந்த இயக்கம் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று இரத்தம் சிந்தி உயிரை அர்ப்பணித்து போராடிக் கொண்டிருக்கிறானே தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளாக விளங்கிக் கொண்டிருக்கும் அவர்களும் இதில் இணைந்து கொண்டு இன்றைக்கு பணியாற்றியிருக்கிற காரணத்தால்தான் இன்றைக்கு நாம் கம்பீரமாக மக்களிடத்தில் செல்ல முடிகிறது.

நேற்றிலிருந்து போனை வைக்கவே முடியவில்லை. எல்லோரும் போன் செய்து, ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள்... ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள் என்று பாராட்டினார்கள். சமூக வலைத்தளங்களில் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் பாராட்டுகள்தான் வந்து கொண்டிருக்கிறது.

நான்கூட பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். பல இடங்களில் பேசுகிறபோது சொன்னேன். இங்கேகூட மகேஸ் பொய்யாமொழி பேசுகிறபோது சொன்னார். ‘நம்பர் ஒன்’ முதல்வர் என்று பாராட்டினார். ‘நம்பர் ஒன்’ முதல்வர் என்பதை எனக்கு அதிகமான பெருமையாகவோ பாராட்டாகவோ நினைக்கவில்லை. என்றைக்கு ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று வருகிறதோ அன்றைக்குத்தான் எனக்குப் பெருமை. அதையும் நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்‘. அதனால் அதையும் நிச்சயம் நிறைவேற்றுவான் என்ற அந்த உறுதியை எடுத்துச் சொல்லி, அவ்வாறு நிறைவேற்றுகிற அந்த ஆற்றலுக்கு பக்கபலமாக இருப்பவர்களில் ஒருவர்தான் நம்முடைய அய்யாராசு. எனவே அப்படிப்பட்ட ஒரு லட்சியத் தொண்டனை பெற்றிருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.

அவருடைய இல்லத்துக் குடும்ப விளக்குகள் சிறப்பாக வாழ வேண்டும். இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் நான் நிறைவாகச் சொல்ல விரும்புவது, நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு - அதற்காக அவசரப்பட்டுவிட வேண்டாம் - அளவோடு பெற்று, வளமோடு வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய முறை. இன்றைக்கு ஒன்றிய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி - குடும்பக் கட்டுப்பாட்டிற்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்குத் தெரியும். அதற்காக நிதி ஒதுக்கீடு எல்லாம் செய்திருக்கிறார்கள்.

அதனால் நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு - அளவோடு பெற்றாலும் - அந்தக் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுகள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால் தமிழுக்குத் தலைவர் கருணாநிதி எவ்வாறெல்லாம் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு இந்தத் திருமணம் சுயமரியாதை உணர்வோடு நடக்கிறது என்றால், இது வெறும் சுயமரியாதைத் திருமண மட்டுமல்ல, சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, தமிழ்த் திருமணம். அதையும் மறந்து விடக்கூடாது.

இந்தத் தமிழுக்குதான் தலைவர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்கிற அங்கீகாரத்தை பெற்று தந்திருக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட இந்த அழகான தமிழ் மொழியில் பெயர் சூட்டுங்கள்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், ‘வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்’ வாழுங்கள்... வாழுங்கள்... வாழுங்கள்... என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம் என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT