தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மலர் விற்பனை சந்தையில் மல்லிகைப் பூ வரத்து குறைவால் கிலோ ரூ 1,700-க்கு விற்பனையானது.
தேனி மாவட்டம் கம்பத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர் விற்பனை சந்தை உள்ளது. இங்கு சீலையம்பட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல வகையான பூக்கள் விற்பனைக்கு நாள்தோறும் வருவது வழக்கம்.
வரத்து குறைவான மல்லிகை பூ
தற்போது மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் மல்லிகை பூ விளைச்சல் இல்லை, காரணம் பனியில் மல்லிகை பூ கருகி விடும், இதனால் மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சாகுபடியில் ஈடுபடுவதில்லை. சாகுபடி இல்லாததால் மலர் சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து இல்லாத நிலை உள்ளது.
கிலோ 3 ஆயிரம் ரூபாய்
மழை மற்றும் பனிக்காலம் என்பதால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே பனி, மழை தாக்காமல் மல்லிகைப் பூ சாகுபடி செய்வர், அதனை அறுவடை செய்து, சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். சந்தையில் வரத்து குறைவு என்பதால் விலை அதிகரிக்கும். அதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் சனிக்கிழமை மல்லிகை பூ கம்பம் சந்தையில் கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனையானது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூபாய் 1,700க்கு விற்பனையானது.
இதர பூக்களும் விலை உயர்வு
மல்லிகைப் பூ வரத்து குறைவு, விலை அதிகம் என்பதால், மல்லிகை பூ விற்கு அடுத்த ரகமான முல்லைப்பூ கிலோ ரூபாய் 800 கற்கும், ஜாதிப்பூ கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனையானது. சந்தையில் இதர பூக்களின் விலை விவரம் வருமாறு - பட்டன் ரோஸ் (கிலோ வில்), ரூபாய் 140, செவ்வந்தி - 130, பன்னீர் ரோஸ் - 100, சம்மங்கி - 60, சாதா ரோஸ் - 60, சென்டு பூ - 40 க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.