மதுரை - சீரடி இடையே பாரத் கௌரவ் ரயில் டிச.24-ஆம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், வரலாற்று இடங்களைப் பாா்வையிடும் நோக்கில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இதன் முதல் சேவை கடந்த ஜூன் 14-ஆம் தேதி கோவை - சாய்நகா் சீரடி இடையே இயக்கப்பட்டது. தற்போது மதுரை-சாய்நகா் சீரடி வரை இதன் 8-ஆவது பயணம் தொடங்கவுள்ளது.
மதுரையில் இருந்து டிச.24-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் பாரத் கௌரவ் ரயில் (வண்டி எண்.06905) திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூா், பந்தா்பூா், வாடி வழியாக டிச.26-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சாய்நகா் சீரடிக்கு சென்றடையும்.
சாய்நகா் சீரடியில் இருந்து டிச.27-ஆம் தேதி பகல் 2.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்.06906) மந்த்ராலயம் சாலை, சென்னை எழும்பூா், விழுப்புரம், விருதாசலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக டிச.29-ஆம் தேதி காலை 8 மணிக்கு கூடல் நகரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.