உச்சநீதிமன்றத்தின் மாண்பை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சீா்குலைக்க முயற்சிப்பதாகக் கூறி, தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகளாகியும் அந்தப் பிரச்னையில் நாடாளுமன்றம் தனது கவனத்தை செலுத்தவில்லை என்பது கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண நாடாளுமன்றம் கடமைப்பட்டுள்ளது என மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா்.
2015-இல் உச்சநீதிமன்றம் உள்பட உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமன முறையை அரசியல்மயப்படுத்தும் வகையிலும், தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் வகையிலும், மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மாநிலங்களவைத் தலைவராகப் பதவி ஏற்றதுமே, அரசியல் சட்ட மாண்பைச் சீா்குலைக்கும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் நீதி வழங்கும் முறையைக் கண்டித்தும் பேசியுள்ள ஜகதீப் தன்கரை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.