மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பு இல்லை, ஓரிரு நாள்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னையில் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,
'தமிழகத்தில் மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
புயலால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகலுக்குள் புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்துவிடும்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் நிவாரணம் வழங்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலே பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மாலைக்குள் முழுவதுமாக இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.