மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடற்கரை- வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.
சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.
இதையும் படிக்க | மின்சாரத் துறையில் பெரிய சேதாரங்கள் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி
புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்படவுள்ளது.
தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகரம் முழுவதும் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாண்டஸ் புயல் காரணமாக, பேசின் பிரிட்ஜ், சென்னை கோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
ரயில் நிலையங்களில் சேதமான மின்கம்பங்களை சீரமை்ககும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புயல் காரணமாக, சேப்பாகம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.